![தமிழக பட்ஜெட் 2012-13 தமிழக பட்ஜெட் 2012-13](http://www.thoothuonline.com/wp-content/uploads/2012/03/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-2012-133-270x170.jpg)
சென்னை:தமிழக அரசின் பட்ஜெட் இன்று வருவாய்த்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அதில் சிறுபான்மை மக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
சிறுபான்மையின மாணவ-மாணவியர்கள் கல்வியில் உயர்வு பெறும் வகையில் அரசு பல்வேறு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. 2011‑2012 ஆம் ஆண்டில், 2,68,211 சிறுபான்மையின மாணவ-மாணவியர்களுக்கு கல்வி உதவி தொகையாக 39 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினைத் தொடர்ந்து செயல்படுத்த 2012‑2013 ஆம் ஆண்டிற்கு 55 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஹஜ் குழுவின் நிர்வாகச் செலவினங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத் தொகையை பத்து லட்ச ரூபாயிலிருந்து இருபது லட்ச ரூபாயாக இந்த அரசு உயர்த்தி ஆணையிட்டுள்ளது. 2012‑2013 ஆம் ஆண்டும், உயர்த்தப்பட்ட இதே அளவில், மானியத் தொகை வழங்கப்படும்.
உலமாக்களின்(முஸ்லிம் அறிஞர்களின்) மாத ஓய்வூதியம் 750 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2012-2013 ஆம் ஆண்டில் உலமாக்களின் நலவாரியத்திற்கு உதவி தொகையாக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டைப் போன்றே 2012-2013 ஆம் ஆண்டிலும் கிருத்துவர்கள் ஜெருசல நகரத்திற்கு புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு உதவும் வகையில் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா, சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்துவேன் என அறிவித்திருந்தார். ஆனால், அதைப்பற்றிய தகவல் எதுவும் பட்ஜெட்டில் கூறப்படவில்லை.
No comments:
Post a Comment