![Abdur Rahman holding a campaign poster of his imprisoned son Ziaur Rahman Abdur Rahman holding a campaign poster of his imprisoned son Ziaur Rahman](http://www.thoothuonline.com/wp-content/uploads/2012/04/Abdur-Rahman-holding-a-campaign-poster-of-his-imprisoned-son-Ziaur-Rahman-270x170.jpg)
புதுடெல்லி:டெல்லி மற்றும் அஹ்மதாபாத் குண்டுவெடிப்பு வழக்குகளில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜியாவுர் ரஹ்மான் டெல்லி மாநகராட்சி வார்டு தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார்.
தெற்கு டெல்லி மாநகராட்சியில் அமைந்துள்ள ஸாக்கிர் நகர் வார்டில் ஜியாவுர் ரஹ்மான் சுயேட்சையாக போட்டியிட்டார். இவரை எதிர்த்து முக்கியமாக காங். கட்சி சார்பில் சோயப் டேனிஸ் போட்டியிட்டார். நேற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த வேளையில் சோயப், ஜியாவுர் ரஹ்மானை வெறும் 517 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். சோயப் டேனிஸ் 8194 வாக்குகளையும், ஜியாவுர் ரஹ்மான் 7677 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
டெல்லி மற்றும் அஹ்மதாபாத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகள் தொடர்பாக 2008-ஆம் ஆண்டு நடந்த பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டருக்கு பிறகு ஜியாவுர் ரஹ்மான் கைது செய்யப்பட்டார். இவர் தற்பொழுது சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜியாவுர் ரஹ்மானுக்காக அவரது தந்தை அப்துர் ரஹ்மான் மற்றும் உறவினர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
தேர்தல் முடிவு குறித்து ஜியாவுர் ரஹ்மானின் தந்தை அப்துர் ரஹ்மான் கூறுகையில், “இப்பகுதிகளில் நாங்கள் செல்லும் போது யாரும் எங்களிடம் வருவதில்லை. தற்பொழுது பெரும்பாலான மக்கள் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் எங்களுடன் உள்ளார்கள். அவர்களுக்கு பயமோ, சுயநலனோ இல்லை. பொதுவாகவே குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சமுதாயம் அங்கீகாரம் அளிப்பதில்லை. இத்தேர்தல் நீதிக்கான ஒரு காலடிச் சுவடாகும். இதன் மூலம் பெரும்பாலான மக்களை தொடர்புகொள்ள முடிந்துள்ளது.” என்றார்.
உள்ளூர் சமுதாய தலைவர் முஷாரஃப் ஹுஸைன் கூறுகையில், “ஜியாவுர் ரஹ்மான் தேர்தலில் தோல்வியை தழுவியிருந்தாலும் அவர் முத்திரை பதித்துள்ளார். அவர் பெற்ற வாக்குகள் மூலம் மக்கள் அவர் நிரபராதி என்பதை நம்பியுள்ளனர். மேலும் அவருக்கு பெரும்பாலான மக்களின் ஆதரவும் உள்ளது.” என்றார்.
வெற்றிப்பெற்ற காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த முஸ்லிம் வேட்பாளர் சோயப் டேனிஸ் கூறுகையில், “எனக்கு ஜியாவுர் ரஹ்மான் மீது அனுதாபம் உண்டு. மேலும் அவர் ஒரு நிரபராதி என்பதையும் நான் நம்புகிறேன். ஆனால், இப்பிரச்சனைக்கு இத்தேர்தல் தீர்வு ஆகாது” என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment